திமுகவுடன் உறவு தொடரும்: சிபிஎம்
கோவை: தமிழகத்தில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறவு தொடரும். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் சிபிஎம் ஒருபோதும் இடம் பெறாது என்று கோவையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் நான்காம் நாள் நிகழ்வு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை எஸ்.ராமச்சந் திரன் பிள்ளை நிருபர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் ஸ்தாபன தீர்மானத்தின் 3 மற்றும் 4ம் பாகங்கள் மீது திங்களன்று பிற்பகலும், செவ்வாயன்று பகலிலும் பிரதி நிதிகள் விவாதம் நடைபெற்றது. இதில் கடந்த 18வது மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றி இருப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கடந்த மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடையே கட்சி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 392 அதிகரித்துள்ளது. அதே போல் வர்க்க, வெகுஜன அமைப்புகளில் உறுப்பினர்கள் எண் ணிக்கை 1 கோடியே 26 லட் சத்து 38 ஆயிரத்து 196 அதி கரித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வளர்ச்சி அதிகமானதாகும்.
தமிழகத்தில் சிபிஎம்முக்கு நல்ல வளர்ச்சி
அதே சமயம் கட்சி பலமாக உள்ள மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரதானமாக இந்தி பேசும் மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் பெரும் வளர்ச்சி ஏற்படாதது பற்றி அக்கறையோடு பரிசீலிக்கப் பட்டது.
கட்சியில் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் எண்ணிக்கை 46.08 சதவீதமாக உள்ளது. எதிர்வரும் காலத்தில் அதிக இளைஞர்களை கட்சியில் சேர்க்க முயற்சிப்பது என்றும் முடிவு செய்யப்பட் டுள்ளது.
கட்சி உறுப்பினர்களில் 19.93 சதவீதம் பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் கள். 11.93 சதவீதம் பேர் பெண்கள். இதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மார்க் சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் புதுப்பிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் இடம் பெயர்ந்து செல் வது, லெவி செலுத்தாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைகிறது. நாங்கள் கட்சி உறுப்பினர் புதுப்பிப்பை இறுக்கி இருக்கிறோம். எனினும் ஒட்டு மொத்த உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்திருப்ப துடன், செயல்பாடும் அதிகரித்துள்ளது.
அதிகாரம் இருக்கும் மாநிலங்களில் மட்டும்தான் கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது தவறு. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஜார்கண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது.
காங்.குடன் கூட்டணி இல்லை:
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது. அதன் தலைமையிலான கூட்டணியிலும் இடம் பெற மாட்டோம்.
பாஜகவை தனிமைப்படுத்துவதே எங்களது லட்சியம். அதனுடன் பிற கட்சிகள் சேராமல் தடுப்போம்.
தமிழகத்தில் திமுக, ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 3வது அணி அமைக்க பேசி வருகிறோம். திமுகவுடன் சிபிஎம்முக்கு சுமூக உறவு உள்ளது. இது தொடரும். அதேசமயம், திமுக இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் இடம் பெறவில்லை என்றார் ராமச்சந்திரன் பிள்ளை.