தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சம்ஹாரம் நிஜம்-சரத்
சென்னை: வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழர்களின் பரந்த மனப்பான்மையை ஏமாளித்தனம் என்று நினைத்தால் பிற மாநிலத்தினர் நினைத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இந்திய மக்கள் சமத்துவக் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால் பிராந்திய உணர்வு, வெறியாக மாறி தேச ஒற்றுமைக்கே குந்தகம் விளைந்து விடும் அபாயம் இருக்கிறது.
மத்திய அரசு நடுநிலை தவறி தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கும், தங்களால் எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள மாநிலங்களுக்கும் ஆதரவாக செயல்பட்டு தமிழ்நாட்டு நலனை புறம் தள்ளுகிறதோ என்ற அச்ச உணர்வு தமிழக மக்களுக்கு வந்து விட்டது.
இந்த நிலை உடனடியாக நீக்கப்பட்டு, மாநிலங்களுக்கு இடையேயான விரிசல்கள் சரி செய்யப்படாவிட்டால், சுதந்திரத்திற்கு முந்தைய பிரிவினை நிலையை நோக்கி நாடு சென்று விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரிப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முற்படும் ஆந்திர அரசு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க அளவை உயர்த்த மறுக்கும் கேரள அரசு, காவிரிக்கு வீட்டுக் காவல் போட்டதோடு, தமிழகத்தை வெள்ள வடிகால் பிரதேசமாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு இப்போது ஓகனேக்கல்லுக்கும் உரிமை கோரும் கர்நாடகம் இப்படி தமிழ்நாட்டை அண்டை மாநிலங்கள் தொன்று தொட்டு சீண்டி வருகிறது.
தற்போது தமிழர்களும், அவர்களின் உடமைகளும் கர்நாடகத்திலே தாக்கப்படுவத தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், பெங்களூர் நகரத்தின் தோட்டத் தொழில் வளர்ச்சிக்கும், கோலார் தங்கச் சுரங்க வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்கள் அம்மாநிலத்தில் வாழும் தமிழர்கள் என்பதை மறந்து விட்டு கர்நாடகாவுக்கும், தமிழகத்திற்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் உள்பட எந்தப் பிரச்சினையானாலும் அந்த சமயத்தில் கர்நாடகத்தில் வாழுகிற தமிழர்களை கேடயமாக பயன்படுத்த நினைப்பது, அவர்களை மிரட்டுவதன் மூலம் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதன் மூலம் தமிழகத்தை அடிபணிய வைக்க முடியும் என்று கர்நாடக அரசியல் கட்சிகள் நினைக்குமானால் அது மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழர்களின் பரந்த மனப்பான்மையை ஏமாளித்தனம் என்று நினைக்கும் அண்டை மாநிலத்தவரின் எண்ணத்தை நாம் உணர்ந்தாக வேண்டும். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சம்ஹாரம் நிஜம் என்று சங்கே முழங்கு என்ற பாரதிதாசனின் வரிகளையே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் வழிமொழிகிறது என்று கூறியுள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications