ஓகனேக்கல்: 'புள்ளி வைக்க வேண்டும்'- விஜயகாந்த்
சென்னை: அணுசக்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை இடதுசாரிகள் நடுநடுங்க வைப்பது போல கர்நாடகத்தை நடுங்க வைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பெங்களூரில் கன்னட அமைப்பினர் நடத்தி வரும் வன்முறைகள் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதன் மீது பங்கேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில், இந்த திட்டம் குறித்தும், கர்நாடகத்தில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் இங்கே பேசியவர்கள் விளக்கமாக சொன்னார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு மற்றவர்களை காரணமாக கூறுவதற்கு முன்பு, நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும்.
ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுகிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்கிற பழமொழிக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். நமக்கு ஆடியும், பாடியும் கறக்கத் தெரியும்.
நாம் பயந்து கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் நாம் முன்னெச்சரிக்கையோடு அமைதி காக்கிறோம்.
புள்ளி வைக்க வேண்டும்:
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி ஒரு புள்ளியை வைக்கும் போது காங்கிரஸ் கட்சி பயந்து நடுங்குகிறதோ, அதே போன்ற ஒரு 'புள்ளியை' இந்த பிரச்சனையில் தமிழக அரசும் வைக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றார் விஜயகாந்த்.