இளைஞர் காங்.கின் 'டிஸ்கவரி ஆஃப் தமிழ்நாடு'
கோவை: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆயத்தமாகி வருவதாக தமிழக இளைஞர் காங்கிரசின் மாநில தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல்காந்தி 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற அகில இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் அறிமுகத்தை ஏற்படுத்தவும், மாநிலங்களில் கட்சியின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இந்த பயணத்தை ராகுல் மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைமை மாவட்டம்வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியதாவது: ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்களை சென்று சேருகிறதா, திட்டங்களுக்கு எப்படிபட்ட வரவேற்பு கிடைத்துள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெற்றி பெரும் வகையில் வியூகம் அமைத்து செயல்படுகிறோம். அதற்காக எல்லா மாவட்டத்திலும் சுற்றுப் பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
கடந்த பிப்ரவரி 12ம் தேதி துவங்கி சேலம், திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறோம். நாடாளுமன்றத்ததேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கடுமையாக உழைக்க தயாராகியுள்ளோம் என்றார்.