கர்நாடக வன்முறை-திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து கன்னட அமைப்பினர் நடத்தி வரும் போராட்டங்களைக் கண்டித்து முதல் முறையாக மதுரையில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களில் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை எதிர்த்து தமிழகத்திலும் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஆங்காங்கு தடுக்கப்பட்டு மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று சென்னையில் கன்னடர்கள் நடத்தி வரும் சில ஹோட்டல்கள் தாக்கப்பட்டன.
இந்த நிலையில் முதல் முறையாக இந்தப் போராட்டத்தில் திமுகவும் கலந்து கொண்டுள்ளது. மதுரையில் இன்று திமுகவினர் பெரும் திரளாக கூடி கர்நாடக வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் எடியூரப்பா உள்ளிட்ட கர்நாடக தலைவர்களின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன.
சென்னையி்ல் சிறுத்தைகள் போராட்டம்:
சென்னையில் தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்கம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெருமளவில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசியல் தலைவர்களைக் கண்டித்தும், வன்முறையில் ஈடுபடும் கன்னட அமைப்பினரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்பகுதியில் உள்ள உடுப்பி ஹோட்டல் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.