மத்திய அரசை கண்டியுங்கள்-விஜயகாந்த்

திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் பிற்பகல் 1.30 மணியளவில் பேசினார். அவரது பேச்சில் மத்திய அரசை கடுமையாக சாடினார்.
விஜயகாந்த் பேசுகையில், தண்ணீர் பிரச்சினை, கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும் என்று பேசினார்கள். அது அல்ல பிரச்சினை. நமது தண்ணீரை நாம் எடுக்க விட மாட்டேன் என்கிறார்கள் என்பதே பிரச்சினை.
அவர்கள் நமக்கு ஒதுக்கிய தண்ணீரின் அளவிலும், குறைந்த அளவில்தான் தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் அதை எடுக்கத்தான் பிரச்சினை இப்போது.
அங்கு தேர்தல் நடக்கவுள்ளதால் அங்கு இருப்பவர்கள் அரசியல் செய்கிறார்கள். இங்கு இருப்பவர்களும் செய்ய வேண்டிய சூழ்நிலை. இதில் பலிகடாவாகியிருப்பது தமிழ்த் திரைப்படங்கள்தான், திரைத்துறையினர்தான்.
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பார்கள். வந்தவரை எல்லாம் தமிழகம் வாழ வைத்துக் கொண்டுதான் உள்ளது. எல்லா மொழியும், எல்லா மக்களும் ஒன்றுதான் என்று தமிழ் மக்கள் நினைத்துக் கொண்டுதான் உள்ளனர்.
அங்குள்ள கன்னட மக்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால் சில அரசியல்வாதிகள் சுய நலத்துக்காக எதை ஆயுதமாக எடுக்க வேண்டுமோ அதை எடுத்து செயல்படுகிறார்கள்.
சரி, இந்தப் பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு முதலில் பெங்களூரில் தேர்தல் முடிய வேண்டும். அங்கு அரசு அமைய வேண்டும். ஒரு முதல்வர் அமர வேண்டும். அதன் பிறகு என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். ஆனால் அங்கு வரும் முதல்வர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பாரா அல்லது புதிய பிரச்சினையை கிளப்புவாரா என்பது தெரியாது.
நாம் சூடாகப் பேசி விட்டு போய் விடலாம். ஆனால் என்ன பிரயோஜனம்?. அங்கிருக்கிற தமிழர்கள், தங்களது பாதுகாப்புக்காக கன்னட அமைப்புகளில் சேர வேண்டிய நிலை.
அங்குள்ள கவர்னரே நீதிமன்றத் தீர்ப்புகளை ஏற்க மாட்டோம் என்கிறார். இவர்களை யார் கண்டிப்பது மத்திய அரசுதான் கண்டிக்க வேண்டும்.
எல்லோரும் மத்திய அரசு, கர்நாடக அரசிடம் சொல்ல வேண்டும், சொல்ல வேண்டும் என்கிறார்கள். அது என்ன சொல்ல வேண்டும் என்று கூறுவது?.
மத்திய அரசை கண்டிக்க வேண்டும். அதைத் தைரியமாக நீங்கள் பேசுங்கள். ஓட்டு மட்டும் நம்மிடம் வாங்கினார்களே, பிறகு என்ன மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது? உத்தரவு போடுங்கள். ஏன் பயம்?, எதற்குப் பயம்?.
குடிநீருக்கு யாராக இருந்தாலும் உடனடியாக தண்ணீர் தர வேண்டும். அதுதான் தர்மம். அதன் பிறகுதான் நீர்ப்பாசனம், மற்ற பயன்பாடுகளுக்கு.
இங்கு உண்ணாவிரதம் இருந்தால் அங்கும் போட்டி உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இங்கு நடப்பதைக் காட்டும் டிவி, அங்கு நடப்பதையும் காட்டுகிறது. மாற்றி மாற்றிக் காட்டுகிறது.
தண்ணீர் உரிமையைப் பெறும் தைரியம் இங்கு யாரிடம் இருக்கிறது. தைரியத்தோடு செய்ய வேண்டும். அப்போதுதான் அது உருப்படும். சும்மா பேசுவதால் பிரயோஜனம் இல்லை.
எல்லோரும் இந்தியர்கள் என்று சொல்கிறோம். அப்படியானால் மத்திய அரசு தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டாமா?. மத்திய அரசுதான் தீர்க்க வேண்டும். அதற்கு அங்கு முறையான தலைமை இருக்க வேண்டும்.
கூட்டணி இருக்கிறது. ஆனால் என்ன பிரயோஜனம். ஒன்றுமே இல்லை. தமிழகம், மேப்பில் கடைசியில் இருக்கிறது என்பதற்காக வஞ்சிக்கிறீர்களா?.
இந்தப் பிரச்சினைக்காக சட்டமன்றத்திலும் குரல் கொடுத்தேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று, போராடி போராடி தமிழக மக்கள் அலுத்துப் போய் நிற்கிறார்கள்.
எனவே இதற்கு விமோச்சனம் வர வேண்டும். அது மக்கள் கையில்தான் இருக்கிறது என்றார் விஜயகாந்த்.
பேசி முடித்ததும் நேராக ரஜினியிடம் போய் கை குலுக்கி வணங்கி உண்ணாவிரதப் பந்தலிலிருந்து கிளம்பிச் சென்றார் விஜயகாந்த்.
உண்ணாவிரதத்திற்கு வந்தபோதும் சரி, விடைபெற்றபோதும் சரி சரத்குமாரை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்து விட்டார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications