ஓகேனக்கல்: ஏப்.8ல் தமிழகம் முழுவதும் கடையடைப்பு
சென்னை: கர்நாடகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி (செவ்வாய்கிழமை) முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த பேரவையின் தலைவர் த.வெள்ளையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் கர்நாடகம் பிரச்சினை செய்வது நியாயம் அல்ல. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.
தமிழ் மக்களின் உணர்வை வெளிப்படுத்தவும், கர்நாடகத்தின் அராஜகத்தை கண்டித்தும் வரும் 8ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் முழு கடை அடைப்பு செய்கிறார்கள். ஓட்டல், டீக்கடை உள்பட அனைத்தும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கும்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அன்றைய தினத்தி்ல வணிகர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் உள்ள கன்னடர்களின் கடைகள் தாக்கப்படுவது விரும்பத்தகாத செயல் ஆகும். தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
பாமக ஆர்ப்பாட்டம்:
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பெரும் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications