தமிழர்களைத் தாக்க மாட்டோம்-கன்னட வேதிகே: தமிழ் சங்க தலைவருடன் நாராயண கெளடா சந்திப்பு

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிராக கர்நாடகத்தில் வன்முறை வெடித்துள்ளது. பெங்களூரில்தான் இது உச்சத்தில் உள்ளது. பெங்களூர் தமிழ்ச் சங்கத்தையும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இந்த போராட்டங்களை கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்புதான் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கன்னட ரக்ஷன வேதிகேவின் தலைவர் நாராயண கெளடா நேற்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை சந்தித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூர் பத்திரிக்கையாளர் சங்கத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இருவரும் பரஸ்பரம் பூக்கள், பழங்களை கொடுத்து நட்பையும், அன்பையும் பரிமாறிக் கொண்டனர். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் சால்வையும் அணிவித்துக் கொண்டனர்.
பின்னர் நாராயண கெளடா செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானதே தவிர கர்நாடகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் எதிரானதல்ல.
எப்போதுமே பிற மொழியினருக்கு எதிராக நாங்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை. பெல்காமில் கூட மகாராஷ்டிர அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தினோம். மராட்டிய மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதில்லை.
எனவே இனிமேல் எப்போதும் போல தமிழர்களும், கன்னடர்களும் சகோதரர்களாக இருப்போம். தமிழர்களுக்கு எதிராக எந்தப் போராட்டம் நடத்த மாட்டோம்.
சண்முகசுந்தரம் பேசுகையில், பெங்களூரில் உள்ள தமிழர்கள் வீடுகளில் தமிழ் பேசினாலும் கூட உள்ளத்தளவில் கன்னடர்கள்தான். நாங்கள் கன்னடர்களின் உடன் பிறந்த சகோதரர்கள். எங்களால் இதுவரை கன்னடர்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை.
மாநிலம் முழுவதும் உள்ள இரு தரப்பினரும் அமைதியுடன் வாழவே விரும்புகிறோம். பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் நீண்ட காலமாகவே பிற மொழியினருக்கு கன்னடம் கற்றுத் தருகிறோம்.
கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தமிழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். பெங்களூரில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கான நிலத்தை சின்னச்சாமி முதலியார் என்ற தமிழர்தான் தானமாக வழங்கினார்.
எனவே அன்றும் சரி, இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி கன்னடர்களுக்கு விரோதமாக கர்நாடகத் தமிழர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications