பந்த்: வெறிச்சோடியது ஓசூர்

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அதற்கும் மேலாக ஓகனேக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தமானது என்று அங்குள்ள சில கட்சிகள், அமைப்புகள் கூறி வருகின்றன.
மேலும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக வன்முறைகளும் மூண்டுள்ளன.
இதைக் கண்டித்து நேற்று தமிழ்த் திரையுலகம் சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் கர்நாடக வன்முறையாக கடுமையாக சாடிப் பேசினர்.
இந்த நிலையில் இன்று ஓசூரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை முழு அடைப்பு தொடங்கியது. இந்த கடையடைப்புக்கு வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பந்த் காரணமாக ஓசூர் நகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. நகரமே ஸ்தம்பித்துக் காணப்படுகிறது.
ஓசூருக்கு தமிழகத்தின் பிற நகரங்களிருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் எந்த வாகனமும் ஓசூருக்கு வரவில்லை. அனைத்து வாகனங்களும் எல்லைப் பகுதியான ஜூஜுவாடியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று மாலை வரை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜெய் கர்நாடகா என்கிற கன்னட அமைப்பு இன்று ஓகனேக்கலில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் உள்ளே நுழைந்தால் தடுத்துக் கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோர கர்நாடக எல்லைப் பகுதியில் அம்மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டிலும் கடையடைப்பு - தர்மபுரியில் மனித சங்கிலி:
இதற்கிடையே ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் ஐந்து இடங்களிலும் கடையடைப்பு நடந்தது. தர்மபுரியில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற பிரமாண்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஓசூர் அருகே உள்ள தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில், பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications