தூத்துக்குடியில் கர்ப்பிணி கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நள்ளிரவில் கர்ப்பிணிப் பெண் கழுத்தை அறித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்று விட்டு நகையுடன் ஓடி விட்ட அவரது கணவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகில் மாதாநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற துறைமுக ஊழியர். இவரது மகன் மந்திரமூர்த்தி. இவருக்கும் களக்காட்டை சேர்ந்த சக்தி என்பவருக்கும் கடந்த 23-8-07 அன்று திருமணம் நடந்தது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான மந்திரமூர்த்தி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு மனைவியின் நகையை கழற்றி தரும்படி மந்திரமூர்த்தி கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அதன்பிறகு கணவன்-மனைவி இருவரும் தூங்கி விட்டனர். நள்ளிரவு விழுந்தெழுந்த மந்திரமூர்த்தி மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து முதலில் சக்தியின் கழுத்தை அறுத்த அவர் அதன்பிறகு மார்பு, வயிறு போன்ற பகுதிகளையும் கொடூரமாக அறுத்து சிதைத்தார். ரத்த வெள்ளத்தில் மிதத்த சக்தி சிறிது நேரத்தில் கட்டிலிலேயே பிணமானார்.
சக்தியை கொலை செய்த பின் அவரது கழுத்தில் அணிந்திருந்த நகைகளை மந்திரமூர்த்தி கழற்றிக் கொண்டு ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட சக்தி 4 மாத கார்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரமூர்த்தி ஏற்கனவே ஒரு கொலை செய்து விட்டு சிறைக்குப் போய், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததவர்.
கடந்த 1-1-06ல் புத்தாண்டு குற்றாலம் சென்ற மந்திரமூர்த்தி அங்கு கோமதி என்ற விபச்சாரியிடன் தங்கினார். அவர்களுக்குள் பேரத்தில் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மந்திரமூர்த்தி பாத்ரூமிலிருந்த பல்பை கழற்றி கோமதியை குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் மனைவியைக் கொன்று விட்டு தலைமறைவாகியுள்ளார்.