அமைச்சர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி
டெல்லி: ராகுல் காந்தியை தான் அமைச்சராக்க நினைத்ததாகவும், ஆனால் அவர் அதை மறுத்து விட்டார் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நேற்று மத்திய அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டது. இதில் ராகுல்காந்தியின் ஆதரவு பெற்ற இருவருக்கு (சிந்தியா, ஜிதீன் பிரசாதா) ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஆனால் ராகுல் காந்தியையே அமைச்சராக்க சோனியா காந்தி நினைத்துள்ளார். அவர்தான் மறுத்து விட்டாராம்.
இத்தகவலை சோனியா காந்தியே வெளிப்படுத்தியுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சோனியா பேசுகையில், ராகுல் காந்தியை அமைச்சராக்க தீர்மானித்தேன். அவரிடமும் கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை தீவிரமாக கவனிக்க விரும்புவதாக ராகுல் காந்தி கூறினார். அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தனது கவனம் சிதறும் என்று அவர் கருதினார். பின்னர் தனது பொறுப்பை சரிவர கவனிக்க முடியாது என்றும் கருதினார். எனவேதான் அமைச்சர் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார்.
நிறைய இளம் எம்.பிக்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், கூட்டணி கட்டாயங்கள் அதற்கு இடம் கொடுக்காது.
பண வீக்க விகிதம் உயர்ந்து வருவது கவலை தருகிறது. இது தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் நிலமை சகஜமாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் அரசு முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும் என்றார் சோனியா.
பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ராகுல் காந்தி கட்சியில் முக்கியத் தலைவர். எனவே அவருடன் முக்கிய விஷயங்களில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திலும் அவரது ஆலோசனை கேட்கப்பட்டது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. ஆனால் இது எப்போது முடியும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications