விபச்சார சட்டம்: ரேணுகா ஆவேசம்!
டெல்லி: டெல்லியில் நடந்த விபச்சாரத் தடுப்பு சட்ட மாற்றம் தொடர்பான அமைச்சர்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட, மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி, ஆண் அமைச்சர்களைப் பார்த்து 'மேல் சாவனிஸ்ட்' (ஆணாதிக்கம் கொண்டவர்கள்) என்று திட்டியதால் பரபரப்பு ஏர்பட்டது.
தற்போது நாட்டில் அமலில் உள்ள விபச்சாரத் தடுப்புச் சட்டம், விபச்சாரத்தை ஒழிக்கும் வகையில் வலுவுள்ளதாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. தற்போதைய சட்டப்படி விபச்சாரம் செய்யும் பெண்களுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது. ஆண்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
எனவே இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி தீவிரமாக உள்ளார். இதுதொடர்பாக வரைவுத் திட்டம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அதன்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் குற்றம் செய்தவர்களாக பார்க்கப்படாமல் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.
அதேசமயம், ஆண்கள்தான் குற்றவாளிகளா கருதப்படுவார்கள். அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க இந்த வரைவுத் திட்டம் வகை செய்கிறது.
இதுகுறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரேணுகா சவுத்ரி தவிர மணிசங்கர அய்யர், கபில் சிபல், மீரா குமார், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு சமீபத்தில் கூடி விவாதித்தது. அப்போது விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும் என ரேணுகா பரிந்துரைத்தார்.
இதற்கு ஆண் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர், விபச்சார விடுதியில் மின்சாரக் கோளாறு ஏற்படுகிறது. இதை சரி செய்ய அங்கு போகும் ஆண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.
இதைக் கேட்டதும் ரேணுகா கடுப்பாகி விட்டார். நீங்கள் எல்லாம் ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ரேணுகாவிடம் கேட்டபோது, சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். விரைவில் அவற்றை சரி செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஏற்கனவே சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக விவாதிக்க கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண் அமைச்சர் அம்பிகா சோனியும், இதுபோல கோபம் கொண்டு வெளிநடப்புசெய்து சலசலப்பை ஏற்படுத்தினார். இப்போது ரேணுகா சவுத்ரி ஆணாதிக்கம் கொண்டவர்கள் என்று ஆண் அமைச்சர்களை திட்டியுள்ளது இன்னொரு பரபரப்புக்கு வித்திட்டுள்ளது.