கர்நாடகத்தை கண்டித்து கோயம்பேட்டில் இன்று கடையடைப்பு
சென்னை: ஓகேனக்கல் விவகாரத்தில் கர்நாடகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து திட்டமிட்டபடி இன்று சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகத்தைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் திட்டத்தையே நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்தன.
இருப்பினும், கோயம்பேடு காய்கறி, கனி, மலர் அங்காடிகள் திட்டமிட்டபடி இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று மாலை கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. இன்று மாலை வரை போராட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போராட்டம் முழு அளவில் நடந்து வருகிறது.
கோயம்பேடு மொத்த கடைகள் மூடப்பட்டுள்ளதால், சென்னை நகர் மற்றும் சுற்று வட்டாரங்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத் தொழிலாளர்கள் இன்று கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை கோர்ட்டிலும் வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் டாக்சி டிரைவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேட்டுப்பாளையத்திலும் டாக்சி டிரைவர்கள் உண்ணாவிரதம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி நீதிமன்றத்திலும் இன்று வக்கீல்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல மேட்டுப்பாளையத்தில் இன்று டூரிஸ்ட் வேன்கள், ஆட்டோ சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் டிரைவர்கள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
பஸ் நிலையம் முன் காலை 9 மணிக்கு தொடங்கியது. போராட்டத்துக்கு டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கனகராஜ் தலைமை தாங்குகிறார்.
மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும்.












Click it and Unblock the Notifications