பெயின்டர் நாக்கை வெட்டிய பெண் கைது
சேலம்: மாந்திரீகம் செய்வதற்காக பெயின்டரின் நாக்கை வெட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள நாகியம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (40), பெயின்டராக இருக்கிறார். இவரது மனைவி சந்திரா.
இரும்பாலை காவல் நிலையத்தில் சந்திரா ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எங்கள் வீட்டுக்கு அருகே குடியிருப்பவர் ராஜம்மாள். கடந்த 4ம் தேதி எனது கணவர் வெங்கடாசலம் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சட்னி அறைத்துக் கொண்டிருந்த ராஜம்மாள், அதை சுவைத்துப் பார்க்கும்படி கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
பின்னர் திடீரென்று அவர் மீது மயக்கப் பொடியைத் தூவி அவரது நாக்கை வெட்டி துண்டாக்கினார். ரத்தத்தை மந்திர தகட்டில் தடவி பூஜை செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்த நிலையில் வலி தாங்காமல் எனது கணவர் அலறித் துடித்தார். மாந்திரீகம் செய்வதற்காக எனது கணவரின் நாக்கை வெட்டிய ராஜம்மாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் வெங்கடாசலம் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், வெங்கடாசலம் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவரை தள்ளி விட்டபோது சுவற்றில் மோதி நாக்கு அறுபட்டதாகவும் ராஜம்மாள் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.