தமிழ் நாடக நடிகர் சிட்னியில் மர்ம மரணம்
மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது.
இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான நிலையம் வந்தனர்.
ஆனால் அப்போது பிரகாஷ் குடிபோதையில் இருந்ததால் விமானத்தில் பயணிக்க அவரை மட்டும் அனுமதிக்க மறுத்தனர் விமான நிலைய ஊழியர்கள். இதையடுத்து மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பினார் பிரகாஷ்.
இந்த நிலையில் மார்ச் 25ம் தேதி ஹோட்டலில் பிணமாக கிடந்தார் பிரகாஷ். அதிக அளவில் மது அருந்தி வாந்தி எடுத்து அதன் மீது அவர் விழுந்து கிடந்தார்.
ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர் அல்ல என்று அவருடன் நடித்த சக கலைஞர் பயீஸா ஜலாலி கூறியுள்ளார். இதுகுறித்து ஜலாலி கூறுகையில், பெரும் அதிர்ச்சியாக உள்ளது. எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. அவர் அதிகம் குடிப்பவர் இல்லை. இருந்தாலும், ஓய்வே இல்லாமல் நடித்ததால் ஏற்பட்ட சோர்வில் அன்று அதிகம் குடித்திருக்கக் கூடும்.
இந்திய நாடக நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் பிரகாஷ். தற்காப்புக் கலைகள் மீது அதிக நேசம் கொண்டவர். நல்ல இசையமைப்பாளரும் கூட. சிறந்த நடிகராக விளங்கினார் பிரகாஷ் என்றார்.
பிரகாஷின் உடல் தற்போது சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.