ஓகேனக்கல் திட்டம் நிறுத்தம்: கருணாநிதியின் முடிவு - மொய்லி
பெங்களூர்: சோனியா கேட்டுக் கொண்டதால் தான் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை கருணாநிதி நிறுத்தி வைத்துள்ளார் என்று நேற்று கூறிய கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, இன்று பல்டி அடித்துள்ளார். கருணாநிதியாகத்தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இதையடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பொறுத்திருப்போம், அதுவரை திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்போம் என்று அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.
இந் நிலையில் முன்னாள் கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எந்த ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது, அனுமதி வழங்கியது யார் என்பது பற்றி இப்போது விவாதிக்க தயாராக இல்லை. இந்த பிரச்னையில் இரு மாநிலங்களில் நிலவிய பிரச்னை தணிந்துள்ளது.
இத்திட்டத்தை ஒத்தி வைத்த முதல்வர் கருணாநிதியின் முடிவை வரவேற்கிறேன்.
இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தலையிட்டுள்ளார். கருணாநிதியுடன் சோனியா போனில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால் இத்திட்டத்தை கருணாநிதி ஒத்தி வைக்க சம்மதித்தார். இதற்காக சோனியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடகத்தின் மீது தான் வைத்துள்ள அதீத அக்கறையை இதன் மூலம் சோனியா நிரூபித்துள்ளார் என்று கூறியிருந்தார்.
பல்டி அறிக்கை:
இந் நிலையில் தனது நிலையிலிருந்து பல்டி அடித்து புதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் மொய்லி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் தவறான கண்ணோட்டத்தில் செய்திகளில் வெளியாகியுள்ளன.
சோனியா காந்தி முதல்வர் கருணாநிதியுடன் பேசிய பின்னரே கருணாநிதி திட்டத்தை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உண்மையில், இரு மாநிலங்களிலும் அமைதி நிலவ வேண்டும். பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும். இரு மாநிலத்திற்கும் இடையே சுமூக நிலை நீடிக்க வேண்டும் என்பதுதான் சோனியா காந்தியின் விருப்பமும், கவலையும்.
தமிழகத்தின் தரப்பில் முதல்வர் கருணாநிதி இரு மாநில அமைதியையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவை, கர்நாடக மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications