நூடுல்ஸுக்குள் ரூ. 1.50 கோடி கேட்டமைன் கடத்தல்
சென்னை: சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 1.50 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்லும் இந்தியன் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக வந்த இளையாங்குடியைச் சேர்ந்த ஷேக் முகைதீன், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஹாஜி முகைதீன் ஷாகுல் அமீது ஆகியோர் வைத்திருந்த பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அதில் பாக்கெட்டுகளில் ரவையும், நூடுல்ஸும் இருந்தன. இதையடுத்து அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அந்த பாக்கெட்டுக்களை பிரித்துப் பார்த்தபோது அதில் கேட்டமைன் மாத்திரைகள் இருந்தன.
இதை உரிய அனுமதி இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது. இதையடுத்து ரூ. 1.50 கோடி மதிப்புள்ள 13 கிலோ கேட்டமனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரும் விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.