தூத்துக்குடி கடற்கரையில் தீடீர் புகை: பொதுமக்கள் பீதி
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் நேற்று திடீரென்று புகை வெளியேறியது.
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி கடற்கரையில் நேற்று காலை 6 மணியளவில் மீனவர்கள் நாட்டு படகுகளை நிறுத்தி கொண்டிருந்தனர். அப்போது சற்று தொலைவில் திடீரென்று கடற்கரை மணலில் இருந்து சாம்பல் நிறத்தில் புகை வெளியேறியது.
மீனவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அதற்குள் அப்பகுதியினரும் அங்கு கூடிவிட்டனர். புகை அதிகமானதையடுத்து எரிமலையாக இருக்குமோ என்று பீதியடைந்தனர்.
தகவலறிந்த ஊர் தலைவர் முனியசாமியும் அங்கு வந்தார். ஆட்களை வைத்து புகை வந்த இடத்தில் குழி தோண்டி பார்த்தனர். 2 அடி ஆழம் தோண்டியதும் புகை அதிகமாக வந்தது. மணலும் சூடாகி இருந்தது.
இதையடுத்து வடபாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மனோகரன், எஸ்ஐ ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு கடலில் இருந்து நீர் எடுத்து செல்லும் குழாய்கள் செல்வதும், அதன் அருகில் மின் மோட்டாருக்கு வயர்கள் செல்வதும் தெரிய வந்தது.
மேலும் இந்த வயர்கள் ஒன்றொடு ஒன்று உரசியதால் புகை வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.