நிலம் மீட்பு-சட்டசபையில் அதிமுக அமளி
சென்னை: மதுராந்தகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகாத்த ராமர் கோவிலின் நிலம் மீட்கப்பட்டது தொடர்பாக சட்டசபையில் திமுக-அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி தேவி, மதுராந்தகம் ஏரி காத்தராமர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்ததா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், நீதிமன்றத்தின் மூலம் மதுராந்தகம் பகுதியில் 20 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டதாகவும், அது (அதிமுகவைச் சேர்ந்த ஒருவரைக் குறிப்பிட்டு) அவரிடம் இருந்து மீட்கப்பட்டது என்றும் பதில் தந்தார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த நிலத்தை வைத்திருந்தவரின் பெயரை குறிப்பிடக் கூடாது, அவர் சார்ந்த கட்சியின் பெயரையும் கூறக் கூடாது. கேள்வி நேரத்தின்போது யார் மீதும் குற்றச்சாட்டு கூறக் கூடாது என்றனர்.
மேலும் அதிமுக எம்எல்ஏக்களும் கூண்டோடு எழுந்து நின்று அமைச்சர் குறிப்பிட்ட நபரின் பெயரை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
பதிலுக்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம் செய்ததால் சட்டசபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சர்கள் அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் எழுந்து குறிப்பிட்ட நபரின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், உறுப்பினர் கேட்ட கேள்விக்குத்தான் நான் பதில் சொன்னேன். யார் மீதும் குற்றச்சாட்டு கூறவில்லை. இதில் தவறும் எதுவும் இல்லை என்றார்.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் தலையிட்டு, அமைச்சர் குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.