மியான்மார்-கன்டெய்னருக்குள் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட 54 பேர் பலி
பாங்காக்: தாய்லாந்துக்கு திருட்டுத்தனமாக, கன்டெய்னர் பெட்டியில் ஒளிந்து கொண்டு வந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த 54 பேர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களில் 37 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள் ஆவர். 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மேற்கு தாய்லாந்தில் உள்ள கடலோர மாகாணமான ரனோங்கிலிருந்து இந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கன்டெய்னருக்குள் மறைத்து, புகெட் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது காற்றோட்டம் இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர்.
அவர்கள் பயணித்த கன்டெய்னர், குளிர்சாதன வசதி கொண்ட ஐஸ் பெட்டியாகும். இதில் மீன்களை பதப்படுத்தி கொண்டு செல்வது வழக்கம். இந்தப் பெட்டிக்குள் மனிதர்களைக் கொண்டு சென்றால் மூச்சுத் திணறி உயிரிழந்த பரிதாபம் நேர்ந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.