தொழில் வள சாலையாகும் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை
சென்னை: சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையை தொழில் வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துமாறு முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுதிய நேர்முகக் கடிதத்தில் டெல்லியிலிருந்து மும்பை வரை செல்லும் நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக உருவாக்கிட மத்திய அரசு அறிவித்துள்ளது போல்,
சென்னை- பெங்களூர் இடையிலான நெடுஞ்சாலையையும் தொழில் வள நெடுஞ்சாலையாக அறிவித்து அதை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக அறிவிப்பதன் மூலம் இந்த நெடுஞ்சாலை முழுவதிலும் உலகத் தரத்திற்கு இணையான கட்டமைப்பு வசதிகள் உருவாக வழி வகுக்கும்.
அத்துடன், இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி தொடர்ந்து நிலைபெறவும், மேலும் மேம்படவும் உதவும் என்றும் தமிழக அரசு கருதுகிறது.
இந்த அடிப்படையில், முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் தமிழக அரசுக்கு கடந்த 1ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையை ஒரு தொழில் வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளதாகவும், இத்திட்டம் மும்பை வரை நீட்டிக்கப்படுமாயின் மேலும் பயன்தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை- பெங்களூர்- மும்பை தொழில் வள நெடுஞ்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தொடர்புடைய மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு ஒரு கொள்கை அறிக்கையைத் தயாரிக்கும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.