ஓகேனக்கல்- கருணாநிதிக்கு ஜூன் வரை விஜயகாந்த் கெடு

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் கோரி தேமுதிக சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
"தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் அதிகளவில் புளோரைடு உள்ளது. இந்த நீரைக் குடிப்பதால் காசநோய், சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்.
கடந்த 1998ல் மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டும் நிதி பற்றாக்குறையால் செயல்படுத்த முடியவில்லை. தற்போது செயல்படுத்த தொடங்கிய நிலையில் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை அமைதி காப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மத்திய அரசிடம் பேசி இந்த திட்டத்தை அவர் செயல்படுத்தியிருக்கலாம். ஆனால் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னையான இத்திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக கலந்தாலோசித்து விரைந்து செயல்படுத்த வேண்டும். ஜூன் மாதம் வரை பொறுத்திருப்போம். அதன் பிறகும் திட்டத்தை செய்படுத்தவில்லை என்றால் தேமுதிக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பஸ் கட்டணமும் உயர்ந்து கொண்டே போகிறது. வெவ்வேறு பெயர்களில் மறைமுகமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. விலை உயர்வை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் என்றார்.












Click it and Unblock the Notifications