Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட ஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' கூடாது-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 'கிரீமி லேயரே' இருக்கக் கூடாது என முதல்வர் கருணாநிதி கூறினார்.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், பிற்பட்டவர்களில் பொருளாதாரரீதியில் முன்னேறிய வகுப்பினருக்கு (கிரீமி லேயர்) இந்த சலுகை கூடாது என தீர்ப்பளித்தது

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பாமக தலைவர் ஜி.கே. மணி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அவர் கூறுகையில்,

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் 2007ம் ஆண்டில் தடை விதித்தது. இதையடுத்து 27 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் இரு சபைகளையும் கூட்டி விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஒரு வழக்கு தொடர்ந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் வழக்கு தொடர்ந்தார். இதன் காரணமாக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கை வெற்றி பெற்றிருக்கிறது.

இதற்கு முழு முயற்சி எடுத்த முதல்வர் கருணாநிதிக்கும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் இந்த சட்டசபையில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொள்கிறேன்.

சுதர்சனம் (காங்கிரஸ்): பிற்பட்ட மக்கள் வாழ்க்கைத் தரம் உயர இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். பிற்பட்ட மக்கள் வாழ்க்கை தரம் உயர சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் அன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பலர் எதிர்த்தாலும் மேல்முறையீடு செய்து வெற்றி கிடைத்துள்ளது.

இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த முதல்வர், ஆதரவு கொடுத்த டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தீர்மானத்தை எதிர்க்கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியினரும் பேசினர்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி பதிலளித்துப் பேசியதாவது:

சமூக நீதிக்கான பயணம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் நீதிக்கட்சி காலத்திலே அன்றைய அமைச்சர் முத்தையாவுடைய காலத்திலிருந்து தொடங்கி இன்றளவும் ஒரு நூற்றாண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

1920ம் ஆண்டுக்குப் பிறகு, முதல் கம்யூனல் ஜி.ஓ. எனத் தொடங்கிய இட ஒதுக்கீடு, மத்திய அரசு கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான தனிச்சட்டம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் இணைந்து கொடுத்த அழுத்தம் காரணமாக பண்டித ஜவஹர்லால் நேரு இந்திய அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கென முதல் திருத்தத்தை செய்திட முன் வந்தார் என்பதை நாம் மறந்து விட முடியாது.

அன்று தொடங்கி இந்திய அரசியல் சட்டத்தில் 93-வது திருத்தம் வரை இடஒதுக்கீட்டுப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வி.பி.சிங்:

அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட்டிற்கான முதல் கதவு 1990ம் ஆண்டில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதை யாரும் மறந்துவிட இயலாது. அதன் காரணமாக மத்திய அரசுப் பணிகளிலே இட ஒதுக்கீடு கிடைத்தது. அப்பொழுது வட புலத்திலே நடைபெற்ற வன்முறை, மாணவர்களை தீக்குளிக்கச் செய்கின்ற அளவிற்கு நடைபெற்ற காட்டுமிராண்டித் தனமான எதிர்ப்புகள் இவைகளையெல்லாம் மீறி இன்றைக்கு சமூகநீதி வெற்றி பெற்றிருக்கின்றது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்து, உச்சநீதிமன்றத்தால் தடுக்கப்பட்டு, நம்மைப் போன்றவர்கள் நடத்திய- கொடுத்த போர்க்குரல் காரணமாக இன்றைக்கு சமூகநீதி நிலைநிறுத்தப்பட்டு 27 சதவிகித இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் வாயிலாக மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

அது பற்றி நான் மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்யை தொடர்பு கொண்ட போது "கிரீமிலேயர்'' பற்றி அமைச்சரவையிலே யோசிக்க இருக்கிறோம் என்று அவர் கூறியதறுதல் தரக் கூடிய செய்தியாகும்.

'கிருமி' லேயர்:

அதற்குப் பெயரே 'கிரீமி லேயர்'- 'கிருமி' அதிலே இருக்க வேண்டாம் என்பதுதான் நம்முடைய வாதம். அதை அவர்கள் விலக்கிக்கொள்கின்ற அளவிற்கு மத்திய அமைச்சரவை யோசித்து முடிவெடுக்கும். நம்முடைய போராட்டத்தினுடைய தொடர்ச்சியாக சமூகநீதி என்பது முற்றுப் பெற்றுவிட்ட ஒரு போராட்டம் அல்ல. இன்னும் முழுமையடைய வேண்டிய நிலை நிறைய பாக்கி இருக்கிறது. அதை நாம் நிறைவேற்றியாக வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் நாம் இந்த அவையிலே எழுப்பிய அந்தக் குரலுக்கு அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஆதரவாக நம்முடைய காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றுமுள்ள விடுதலைச் சிறுத்தைகள், வெளியிலே சொல்லாவிட்டாலும் அதிமுக, மதிமுக ஆகிய இந்தக் கட்சிகளுக்கெல்லாம் இது உடன்பாடானது தான் என்பதை நான் அறிவேன்.

அவர்கள் பேச வேண்டும் பேச வேண்டும் என்று சுதர்சனம் அவர்களைப் பார்த்து கேட்டுக் கொண்டார். மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அப்போது எழுந்த மதிமுக உறுப்பினர் கண்ணப்பன்,

நான் கால தாமதமாக வந்ததால் இதுபற்றி பேச முடியவில்லை. இட ஒதுக்கீடு கிடைக்க தமிழக அரசு எடுத்த முயற்சியால் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது. இது மத்திய-மாநிலஅரசுகள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ம.தி.மு.க. இதை வரவேற்பதுடன் எதிர்காலத்திலும் சமூக நீதி காக்க 100-க்கு 100 சதவீதம் எல்லா விதத்திலும் துணை நிற்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய கருணாநிதி, நண்பர் கண்ணப்பன் காலதாமதமாக வந்து காலதாமதமாகவாவது இந்த ஒத்துழைப்பைத் தந்ததற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.

இதையடுத்து கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அன்பழகன் பெருமை:

முன்னதாக நேற்று சட்டமன்றத்தில் பேசிய அவை முன்னவரும் நிதியமைச்சருமான அன்பழகன்,

30.3.2007ம் தேதியன்று முதல்வரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்ததை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததை, மாற்று வழி காண வேண்டும் என்று தமிழக அரசு மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில்,

அந்த இடைக்கால தடை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இந்த அவையில் முதல்வரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வேண்டுகோள் நீதிமன்றத்தில் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+