கொலை-31 ஆண்டுக்கு பின் இருவருக்கு தண்டனை
கோவை: சமபந்தி விருந்தில் தலித் மாணவரை அடித்து கொன்ற வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து 2 பேருக்கு கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர் தண்டபாணி. கடந்த 1977ம் ஆண்டு மார்ச் 3ம் தேதியன்று சிங்காநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் தண்டபாணியும் அவரது நண்பர்களும் சென்று சாப்பிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சில உயர்ஜாதியினர் தண்டபாணியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தண்டபாணி சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 31 ஆண்டுகளாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பில், தண்டபாணியை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ், நீலகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.7000 அபராதமும் விதிக்கப்பட்டது. கார்த்திக், சம்பத் ஆகியோருக்கு தலா 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர், கொலை நடந்தபோது சிறுவர்களாக இருந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஒரு கொலை வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.