சித்திரை திருநாள்: கோவில்களில் வழிபாடு வழக்கமான உற்சாகம் குறைவு
சென்னை: சித்திரை திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் இன்று தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததால், கோவில்களில் வழக்கமாக புத்தாண்டுக்கு செய்யப்படும் பூஜைகள் செய்யப்படவில்லை.
சித்திரை முதல் நாள்தான் இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது.
இதையடுத்து இன்று தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவில்லை. மாறாக சித்திரைத் திருநாளாக தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடினர்.
சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இருப்பினும் வழக்கமாக புத்தாண்டுக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படவில்லை. பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.
கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல இல்லை. இருப்பினும் பலர் தமிழ்ப் புத்தாண்டாகவே நினைத்து இன்று கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டதைக் காண முடிந்தது.
பாஜக நூதனப் போராட்டம்
மதுரையில், பாஜகவினர் தல்லாகுளம், தமுக்கம் மைதானம் எதிரே உள்ள தமிழன்னை சிலை முன்பு கூடி, சிலைக்கு மாலை அணிவித்து பஞ்சாங்கம் படித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்ப் புத்தாண்டை தமிழக அரசு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications