சோனியா அல்லது ராகுல் பிரதமராக பவார் ஆதரவு
டெல்லி: 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சோனியா அல்லது ராகுல் காந்தியைப் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவரான சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனதை எதிர்த்து தான் காங்கிரஸை விட்டு வெளியேறினார் சரத் பவார். தேசியவாத கட்சியை ஆரம்பித்த அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வெளிநாட்டைச் சேர்ந்த சோனியா காந்தி பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் மன்மோகன் சிங் பிரதமராக ஆதரவு தெரிவித்தார்.
இந் நிலையில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தெரிவிப்பதாக பவார் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சி. அவர்களுடன் எங்களது கட்சியையோ அல்லது திமுக, ஆர்.ஜே.டி. என எந்தக் கூட்டணிக் கட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
நாளையே சோனியா காந்தியையோ அல்லது ராகுல் காந்தியையோ பிரதமர் பதவிக்கு நிறுத்த காங்கிரஸ் தீர்மானித்தால் அதை தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்காது.
யார் பிரதமர் என்பதில் பிரச்சினை எதுவும் இல்லை. இதுகுறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்றார் படேல்.












Click it and Unblock the Notifications