சென்னையில் நடைபாதைகள் மேம்படுத்த ராமதாஸ் கோரிக்கை
சென்னை: சென்னையில் மக்கள் தொகையில் சுமார் 22 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள், கார்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் 80 சதவீத சாலைகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதைத் தவிர்க்க நகர் முழுவதும் நடை பாதைகளை மேம்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
சென்னை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பா.ம.க உருவாக்கியுள்ள செயல்திட்ட அறிக்கையை ராமதாஸ் இன்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சென்னை நகர மக்கள் தொகை 79 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்ந்துள்ளது. மக்கள் நெரிசலில் சிக்கி திணறுகிறார்கள்.
மேம்பாலங்கள் கட்டுவது, பார்க்கிங் வசதி செய்து கொடுப்பது ஆகியவை மட்டும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க உதவாது. 26 சதவீத மக்கள் குடிசையில் வாழ்கிறார்கள். 71 சதவீத மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பயன்படுத்துவது பஸ், ரயில், சைக்கிள், நடை பயணம்தான்.
ஆனால் மோட்டார் சைக்கிள், கார்களை 22 சதவீதம் பேர் பயன்படுத்துகிறார்கள். இவற்றால் 80 சதவீத சாலைகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இதைத் தவிர்க்க நடை பாதைகளை மேம்படுத்த வேண்டும்.
பஸ் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். இப்போதுள்ள நெரிசலை சமாளிக்க நகரில் 6,000 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அடுக்குமாடி வாகனம் நிறுத்தும் இடங்கள் கட்டக் கூடாது.
வீடுகளில் கார்களுக்கு பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார் வாங்க அனுமதிக்க வேண்டும்.
சைக்கிள்களை அதிக அளவு பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம்.
மெட்ரோ ரயில் திட்டம் அதிக செலவை ஏற்படுத்தும் என்பதால் முதலில் இதுபற்றி விரிவான விவாதம் நடத்த வேண்டும்.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு 27 சதவித இட ஒதுக்கீடு வழங்குவதில் கிரீமி லேயர் கட்டுப்பாடு விதிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரீமி லேயரை விஷயத்தில் இட ஒதுக்கீட்டிற்கான வருமான உச்சவரம்பை உயர்த்தலாம் என்ற யோசனை தவறானது.
இதில் முதல்வர் கருணாநிதி இதில் உறுதியாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெற வருமான உச்ச வரம்பு கூடாது என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
இதே போல் பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற மாநிலங்களிலும் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ் கூறினார்.