பாஜக ராஜ்யசபா எம்.பி நாராயணன் தகுதி நீக்கம்
டெல்லி: பாஜகவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் கேப்டன் ஜெய் நாராயணன் பிரசாத் நிஷாத், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான அறிவிப்பை ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி நேற்று ராஜ்யசபாவில் வெளியிட்டார். இதையடுத்து அவர் பதவி இழந்தார்.
பீகாரிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிஷாத், மார்ச் 28ம் தேதி முதல் தனது எம்.பி. பதவியை இழந்துள்ளதாக அன்சாரி அறிவித்தார்.
நிஷாத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அன்சாரி குறிப்பிடுகையில், பாஜக உறுப்பினர் சுஷ்மா சுவராஜ், கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அப்போதைய ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத்திடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நிஷாத் நடந்து கொண்டுள்ளார். எனவே அவரை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து புகார் மனுவின் நகல்களை கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி நிஷாத்துக்கும், ராஜ்யசபா பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கும் ஷெகாவத் அனுப்பி வைத்தார். அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டிருந்தார்.
2006ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஜஸ்வந்த் சிங், ஷெகாவத்துக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், சுஷ்மா சுவராஜ் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவும், அதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து நிஷாத் ராஜ்யசபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
2006ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நிஷாத் அனுப்பிய பதிலில், தன் மீதான புகார்களை மறுத்திருந்தார். மேலும், 20005ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகி விட்டதாகவும், அதன் பின்னர் நவம்பர் 17ம் தேதி அதை வாபஸ் பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனக்கு கட்சிக் கூட்டங்கள் தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல்கள் தரப்பட்டதாகவும், மாதந்தோறும் கட்சிக்கு ரூ. 1200 உறுப்பினர் நிதியாக தர வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த பதில் மனுக்களை 2006ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி உரிமைக் குழுவுக்கு ஷெகாவத் அனுப்பி வைத்தார். விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தார்.
உரிமைக் குழு தனது அறிக்கையை 2007ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி புதிய ராஜ்யசபா தலைவரிடம் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் நகல் நிஷாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. என் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜனவரி 8, மார்ச் 11, மற்றும் 26 ஆகிய தேதிகளில் அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அவர் ஆஜராகவில்லை.
எனவே 1985ம் ஆண்டு கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நிஷாத் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று தெரிவித்திருந்தார்.
பி.ஏ.சங்மா ராஜினாமா ஏற்பு:
இதற்கிடையே, முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்கமா தனது லோக்சபா உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications