ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லை-காங். அறிவிப்பு
டெல்லி: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கும் திட்டம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுபோன்ற யோசனைகளை நிராகரிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் யோசனை தெரிவித்துள்ளார். இதை முதல்வர் கருணாநிதி, தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரபுல் படேல் ஆகியோரும் ஆதரித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த யோசனைகளை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மேலிட செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கட்சி மேலிடத்தின் செய்திக்குறிப்பை செய்தியாளர்களிடம் வாசித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவை சகாக்களும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பல சாதனைகளை செய்து வருகிறார்கள்.
பிரதமர் பதவி தற்போது காலியாக இல்லை. இந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முகஸ்துதி பாட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இப்படிப்பட்ட துதிபாடிகளிடமிருந்து சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் விலகியே இருப்பார்கள். அதையே அவர்கள் விரும்புகின்றனர்.
எனவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்த யோசனை கட்சி மேலிடத்திற்கு இல்லை. இந்த யூகமான பேச்சுக்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராகுல் காந்தி குறித்து தான் கூறிய கருத்துக்களை வாபஸ் பெறப் போவதில்லை என்று அர்ஜூன் சிங் கூறியுள்ளார். ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று நான் கூறியதில் என்ன தவறு இருக்கிறது. அந்தக் கருத்து அப்படியேதான் உள்ளது.
நான் பிரதமர் மன்மோகன் சிங்கை குறைத்து மதிப்பிடவில்லை. அவருக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. அவரது தலைமையின் கீழ் தான் அமைச்சராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் அர்ஜூன் சிங்.
மேலும் இந்த விவகாரத்தில் அர்ஜூன் சிங்கை அழைத்து சோனியா விளக்கமும் கேட்டுள்ளார். அப்போதும் தனது கருத்தை சிங் மாற்றிக் கொள்ளவில்லை. நான் பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு எதிராக பேசியது போல மீடியாக்கள் சித்தரிக்கின்றன. நான் அப்படியேதும் சொல்லவில்லை. ராகுலுக்கு பிரதராகும் தகுதி உண்டு என்று தான் சொன்னேன். அதையே இப்போதும் சொல்கிறேன் என்று கூறிவிட்டுத் திரும்பியுள்ளார்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் அர்ஜூன் சிங் மீது கடுப்பில் உள்ள சில வட இந்திய மீடியாக்கள், அவரை சோனியா கூப்பிட்டு கடுமையாக கண்டித்ததாக கதை கட்டிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.