போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்-அதிமுக வெளிநடப்பு
சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நேற்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் அவைக் காவலர்கள் வெளியேற்றினர். முதல்வர் பேசும்போது அவரைப் பேச விடாமல் தடுக்க முயன்றதாக அரி, வி.பி.கலைராஜன் ஆகியோர் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் சட்டசபையில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை அதிமுக எழுப்பியது. கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் ஆவுடையப்பன் அதற்கு அனுமதி மறுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்றே முதல்வர் பதிலளித்து விட்டார். விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை விசாரணைக் குழுவிடம் அதிமுகவினர் அளிக்கலாம் என்றார்.
இதையடுத்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி செங்கோட்டையன் வெளியேறினார். இதையடுத்து பிற அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.