ஆலடி அருணா வழக்கு: 3 பேர் குற்றவாளிகள்-எஸ்.ஏ.ராஜா விடுதலை
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடன் வாக்கிங் சென்ற நண்பரும், ஆசிரியருமான பொன்னுச்சாமியும் உடன் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி சாக்ரடீஸ் என்பவர்தான். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், ராஜாஸ் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை, பென்னி என்கிற பெனடிக்ட் என்கிற அருண், ஆட்டோ பாஸ்கர், பாலமுருகன், அழகர் என்கிற வளர்ந்த அழகர், ராஜ் என்கிற ஆறுமுகம், கண்ணன் என்கிற காரகண்ணன், பரமசிவன், அர்ஜுனன், தனசிங், ரவி என்கிற டாக் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.ஏ.ராஜா உள்ளிட்டோர் 2005ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் 2001ம் ஆண்டு வரை ஆலடி அருணாவும், ராஜாவும் நண்பர்களாகத்தான் இருந்துள்ளனர். அதன் பின்னர்தான் எதிரிகளாகியுள்ளனர். ஆலடி அருணா ஆரம்பித்த பொறியியல் கல்லூரி தனக்குப் போட்டியாக தொடங்கப்பட்டதாக ராஜா கருதியதாக தெரிகிறது. இதன் காரணமாக பிரச்சினை உருவாகி அதில் கொலை நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பென்னி, அகமதாபாத்தில் தற்கொலை செய்து கொண்டார். ஆட்டோ பாஸ்கர், சேரன்மாதேவி காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து விட்டார். மதுரையைச் சேர்ந்த டாக் ரவி நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் போலீஸில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று நெல்லை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீர்ப்பையொட்டி எஸ்.ஏ.ராஜா, வேல்துரை, பாலமுருகன், அழகர், ராஜ் என்கிற ஆறுமுகம், கண்ணன், பரமசிவன், அர்ஜூனன், தனசிங் ஆகிய 9 பேரும் நீதிபதி பாஸ்கரன் முன்பு இன்று ஆஜராகியிருந்தனர்.
பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார். அதன்படி, பாலமுருகன், அழகர் ஆகியோர் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. வேல்துரை மீதான கொலை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இருப்பினும் ஆயுதம் வைத்திருந்ததாக அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட மற்ற 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. எனவே சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு சாதகமாக்கி அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பேருக்கும் வழங்கப்படும் தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி பாஸ்கரன் தெரிவித்தார்.
டாக் ரவி மீது தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.