மக்களைக் கவர சந்திரபாபு நாயுடு யாத்திரை
ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 21ம் தேதி முதல் சைதன்ய யாத்திரையை மேற்கொள்ளவுள்ளார்.
ஹைதராபாத்தில் இதுகுறித்து சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திர மாநில அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை மக்களிடம் விளக்கும் வகையில் சைதன்ய யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு முதல் கட்டமாக யாத்திரை மேற்கொள்ளப்படும். சித்தூர் மாவட்டம் திருப்பதியில் யாத்திரை தொடங்கும்.
கட்சித் தலைவர்கள், பெரும் திரளான தொண்டர்கள் இந்த யாத்திரையில் கலந்து கொள்வார்கள். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்காமல் மாநில அரசு எப்படி அவர்களை ஏமாற்றி வருகிறது என்பதை விளக்குவோம்.
அரசின் தவறான போக்கு, மக்கள் விரோத செயல்பாடுகள், கொள்கைளை மக்களிடம் தெளிவுபடுத்துவதே யாத்திரையின் முக்கிய நோக்கம். அரசின் முறைகேடுகளையும் அப்போது மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற ெபயரில் மத்திய, மாநில அரசுகள் பெருமளவு வருவாய் ஈட்டுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பயன்படும் வகையில் அரசுகள் செயல்படுகின்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் 5000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அப்படி இருந்தும் இதுவரை விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, குறைந்தபாடில்லை. ஹைதராபாத் தீவிரவாதிகளின் தலைநகரமாக மாறி வருகிறது. பல குண்டுவெடிப்புகள் இங்கு நடந்துள்ளன. இவை அத்தனையையும் மக்களிடம் தெரிவிப்போம் என்றார் நாயுடு.
சந்திரபாபு நாயுடுவின் யாத்திரையில், மறைந்த முன்னாள் என்.டி.ஆரி.ன் குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் பொருட்டு இந்த யாத்திரையை சந்திரபாபு நாயுடு மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications