ரஜினி ரசிகருக்குப் பதவி-தேமுதிகவில் கொந்தளிப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்ட தேமுதிகவில் ரஜினி ரசிகர் ஒருவருக்கு பதவி வழங்கப்பட்டதால் தேமுதிகவினர் கொந்தளிப்படைந்து போராட்டத்தில் குதித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நகர தே.மு.தி.க. செயலாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் ரஜினிகாந்த் ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனால் திருவொற்றியூர் பகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
நமது மன்றத்தைச் சேராத ஒருவருக்கு கட்சிப் பதவியா என்று அவர்கள் கொதிப்படைந்தனர். இதையடுத்து தே.மு.தி.க. நிர்வாகி ஆர்த்திசேகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 10க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர்.
கட்சி நிர்வாகிகளை சந்தித்து இது நியாயமா என்று கேட்டனர். ஆரம்பத்திலிருந்தே விஜயகாந்த்துடன் இருக்கும் எங்களை விட்டு விட்டு ரஜினி ரசிகருக்குப் பதவி வழங்குவதா என்றும் ஆவேசமாக கேட்டனர்.
இந்த நிலையில் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சேகரிடம் மேட்டரைத் தெரிவிக்க அவர் தனது ஆதரவாளர்களுடன் கோயம்பேடு கிளம்பினார்.
இரு தரப்பினரும் ஒரே இடத்தில் கூடியதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி பேச்சுவார்த்தையில் இறங்கினர்.
ஆனால் உங்களுடைய விளக்கம் தேவையில்லை, விஜயகாந்த்தைப் பார்த்த பின்னர்தான் நாங்கள் நகருவோம் என்று ஆர்த்தி சேகர் தரப்பு கூறி விட்டது. ஆனால் விஜயகாந்த் படப்பிடிப்பில் இருப்பதால் அவரிடம் சொல்வதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கூறவே அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த சர்ச்சையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications