கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சோதனை விவரம்-தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் உள்ள கட்டடங்கள் குறித்து நேரில் நடத்திய சோதனை குறித்த விவரம் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட், வளாகத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி தமிழக அரசு கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் தமிழக அரசின் வருவாய் மற்றும் வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடநாடு எஸ்டேட்டுக்குள் அதிரடியாக புகுந்து கட்டடங்களை சோதனையிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எஸ்டேட் வழியாக ஊருக்குள் செல்லும் வழியை மறித்து அங்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் கேட் போடப்பட்டது. இதை எதிர்த்தம் கொடநாடு பஞ்சாயத்து சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மற்றும் கொடநாடு தொடர்பான அனைத்து மனுக்களும் நேற்று நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தன. அனைத்துத் தரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்ட பின்னர், கதவுகள் அடைக்கப்பட்டிருந்தது என்றால் வளாகத்துக்குள் எப்படி சென்று ஆய்வு நடத்தினீர்கள்? என்று அரசுத் தரப்பு வக்கீலிடம் கேட்டார்.
பின்னர், கடந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி எஸ்டேட் நுழைவாயிலில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும், கொடநாடு எஸ்ட்டேட்டிற்குள் நடத்தப்பட்ட சோதனை விவரம் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications