மலேசிய சிறையில் தவித்த குமரி வாலிபர் மீட்பு
உடன்குடி: மலேசிய சிறையில் தவித்த குமரி மாவட்ட வாலிபர் மீட்கப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் ராதிகா செல்விக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சோட்டா பணிக்கன் தேரிவிளை கிராமத்தை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ஜெயகிருஷ்ணன். இவர் கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஏஜென்டிடம் ரூ.85 ஆயிரம் செலுத்தி வேலைக்காக மலேசியா சென்றார்.
அங்கு சிலாங் மாவட்டம் பண்டமிரான் என்ற இடத்தில் ஆங்கிலேயருக்கு சொந்தமான கம்பெனியில் தச்சு வேலை செய்தார். மாதசம்பளமாக ரூ.8 ஆயிரம் பெற்றார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணனின் விசா போலியானது எனக் கூறி அவரை ஒரு ஆண்டு முன்பு மலேசியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகனிடம் இருந்து கடிதம், பணம் வராததால் ஜெய்கிருஷ்ணன் தாய் அதிர்ச்சி அடைந்தார். திருச்சி ஏஜென்டிடம் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. மலேசியாவில் வசிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஜெயகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் தெரிய வநதது. இதுகுறித்து ஜெயகிருஷ்ணன் சகோதரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியை சந்தித்து முறையிட்டார்.
இதையடுத்து அவர் மலேசியாவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகளிடம் பேசி ஜெயகிருஷ்ணனை தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதை தொடர்ந்து அங்குள்ள காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜெயகிருஷ்ணன் மீட்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications