மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு அம்மன் அருள் பெற்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடந்து வரும் சித்திைரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை திருக்கல்யாண வைபவம் நடந்தது.
வடக்கு மற்றும் மேற்கு ஆடி சந்திப்பில் அமைந்துள்ள திருக்ல்யாண மண்டபத்தில் இந்த கோலாகல நிகழ்ச்சி நடந்தேறியது.
முதலில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி, பவளக்கனி வாய் பெருமாள் திருமணத்தைக் காண அழைத்து வரப்பட்டனர். பின்னர் சொக்கநாதர், பிரியாவிடை, விநாயகர் ஆகியோரும் முன்னிருக்க திருக்கல்யாண வைபவம் நடந்தது.
முதலில் விநாயகருக்கு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலை மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மாங்கல்ய தாரணம் நடந்தது.
அம்மன் கழுத்தில் வைரத்தால் ஆன மாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டது. சொக்கநாதராக ஒரு பட்டரும், மீனாட்சியாக ஒரு பட்டரும் செயல்பட அவர்கள் மூலம் திருமணம் நடந்தேறியது.
அதன் பின்னர் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு தம்பதி சமேதரமாக அருள் பாலித்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு களித்தனர்.
பச்சைப் பட்டுடுத்தி, கல்யாண கிரீடம் அணிந்து காட்சி அளித்தார். பிரியாவிடை, நாச்சியார் மாம்பழ கொண்டை அணிந்து காணப்பட்டார்.
திருமணத்திற்கு முன்பாக திருமணத்தைக் காண வந்திருந்தவர்களுக்கு மாங்கல்யக் கயிறுகள் வழங்கப்பட்டன. திருமணம் நடந்த அதேசமயத்தில் அனைத்துப் பெண்களும் தங்களது தாலிக் கயிறுகளை மாற்றிக் கொண்டனர்.
திருக்கல்யாணத்தையொட்டி பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் 25 ஆயிரம் பேருக்கு திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் திருக்கல்யாண நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
இன்று இரவு பூப்பல்லக்கில் அம்மனும், சொக்கனும் நகரை வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்கள்.












Click it and Unblock the Notifications