கொடைக்கானல் மலையில் நக்சலைட் சுட்டுக் கொலை
தேனி மாவட்ட வனப் பகுதியில் சமீப காலமாக நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. முதலில் பெரியகுளம் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் சிக்கினர். இதையடுத்து தேனி மாவட்டத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, முகாம் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் பலர் சிக்கினர். இந்த நிலையில் அதிரடிப்படை முகாம் திடீரென காலி செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் நக்சலைட்டுகள் வனப்பகுதிகளில் குடி புக ஆரம்பித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீஸுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் தாண்டிக்குடி செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் இன்று காலையில், அதிரடிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த நவீன் என்கிற பிரசாத் (வயது 25) என்ற நக்சலைட்டுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் மீது மதிக்கோன்பாளையம் காவல்நிலையத்தில் ஆயுத வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2002ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்ட நக்சலைட்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது போலீசாரிடம் பிடிபடாமல் தப்பி ஓடிய நக்சலைட்டுகளில் நவீனும் ஒருவர். கடந்த 6 ஆண்டுகளாக போலீசார் இவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கொடைக்கானலில் இன்று போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த வேட்டையின்போது 5 பேர் தப்பி விட்டதாக தெரிகிறது. தப்பி ஓடியவர்களைப் பிடிக்க போலீஸார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என்றும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.