வீரப்பன் வழிபட்ட கோவிலில் சாமி கும்பிட பக்தர்களுக்கு தடை
மேட்டூர்: சந்தனக் கடத்தல் வீரப்பன் வழிபட்ட கத்திரிமலை மங்கம்மா கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் தடை விதித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கத்திரிமலை என்ற மலைகிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மங்கம்மா கோயிலில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன வீரப்பன் உயிரோடு இருந்தபோது அடிக்கடி வந்து வழிபாடு நடத்துவராம்.
இந்த கோயிலில் புரட்டாசி மாதத் திருவிழாவும், சித்ரா பௌர்ணமி கிரிவலமும் பிரசித்தம் என்பதால் வீரப்பன் தவறாமல் வந்து கும்பிடுவார்.
கத்தரிமலையில் இருளர் வகுப்பினர் பெரும்பான்மையாக குடியிருந்து வருகின்றனர். ஆனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கருங்கலூர், மேட்டுபாறையூர், காவேரிபுரம் கிராமத்தினர்தான் இந்த கோயில் விழாவை நீண்டகாலமாக நடத்திவந்தனர்.
தற்போது கத்திரிமலை வனப்பகுதி ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கோயில் விழாவை நடத்தும் உரிமையை இருளர்கள் கோரினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தினர் இனி விழாவை நடத்தக்கூடாது என்றும் கூறினர்.
இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வருவாய்த்துறையினர் தலையிட்டு சமசரம் செய்ய முயன்றும் பலன் இல்லை.
இந்நிலையில் இன்று சித்ரா பௌர்ணமி என்பதால் அந்த கோயிலில் இருளர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதனால் மோதல் ஏற்படும் நிலை இருந்ததால் மங்கம்மா கோயிலில் பக்தர்கள் கிரிவலம் நடத்த அதிகாரிகள் தடை விதித்தனர்.
போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். வீரப்பன் கும்பிட்ட கோயில் என்ற ஆர்வத்தில் வந்தவர்களும், கிரிவலம் செய்ய வந்த பக்தர்களும் இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.












Click it and Unblock the Notifications