லாரி, வேன்களில் கட்சிகளின் தொண்டர்கள் பயணிக்க கூடாது: உயர்நீதிமன்றம்
மதுரை: சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளில் தொண்டர்கள் பயணிக்க அரசியல் கட்சிகள் அனுமதிக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை, அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் பல்வேறு சிவில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.
கடந்த 1996ம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 58 திமுகவினர் லாரி ஒன்றில் புதுக்கோட்டையிலிருந்து சென்றனர். அப்போது கலமாவூர் என்ற இடத்தில் சாலையோர புளியமரத்தில் மோதி சிலர் பலியானார்கள்.
பலியானவர்கள் குடும்பத்தின் சார்பில் இழப்பீடு கோரி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் சரக்கு லாரிகளில் பயணித்தவர்களுக்கு இழப்பீடு தர முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்து விட்டது.
இதுதொடர்பாக பலியானோரின் குடும்பத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேஷனல் இன்சூரன்ஸ் சார்பில் விளக்க மனுக்கள் தாக்கல் செயய்ப்பட்டன.
நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாச ராகவன் வாதிடுகையில், சரக்கு லாரிகளில் பயணம் செய்வோர் விபத்தில் சிக்கினால், அவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த 2003ம் ஆண்டு, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கும், ஆஷா
ராணிக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பளித்துள்ளது என்று கூறினார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி சுதாகர், மோட்டார் வாகச் சட்டத்தின் அம்சங்களை யாரும் மனதில் கொள்வதே இல்லை, கவலைப்படுவதும் இல்லை.
சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், லாரிகள் போன்றவற்றில் ஆட்கள் பயணம் செய்யக் கூடாது என்று மோட்டார் வாகனச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அரசியல் மாநாடுகளுக்கும், கூட்டங்களுக்கும் சரக்கு லாரிகள், வேன்களில் தொண்டர்கள் செல்வது இப்போது சகஜமாகி விட்டது.
ஆனால் இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பலியாவது அப்பாவி மக்களின் உயிர்கள்தான். சில நேரங்களில் இறந்தவர்கள், அந்தக் குடும்பத்திற்காக சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்திருப்பார். இதனால் அந்தக் குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.
இதுபோன்ற விபத்துக்களில் இறப்போரின் குடும்பத்தினர், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்தவித இழப்பீட்டையும் கோர முடியாது. மாறாக, அவர்கள் பயணித்த வாகனத்தின் உரிமையாளரிடம்தான் நிவாரணம் கேட்டு முறையிட வேண்டும்.
பல விபத்துக்களில், லாரிகள் அல்லது வேன்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகி விடுகின்றனர் அல்லது தப்பி விடுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இனிமேல், லாலிகள், வேன்ளில் தொண்டர்களை பயணிக்க அரசியல் கட்சிகள் அனுமதி தரக் கூடாது. இதுபோன்ற வாகனங்களில் செல்லக் கூடாது எனவும் கட்சியினரை தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications