விவேகானந்தர் இல்லத்தை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை - கருணாநிதி
சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ள புகழ் பெற்ற விவேகானந்தர் இல்லத்தை அரசு கையகப்படுத்தப் போவதாகவும், அங்கு செம்மொழி ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளதாகும், இதற்காக அங்கு தற்போது விவேகானந்தர் அருங்காட்சியகத்தை நடத்தி வரும் ராமகிருஷ்ணா மடத்தினர் காலி செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் எழுந்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து இன்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் எதிர்க்கட்சிகள் தரப்பில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அதிமுக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேசினர்.
விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், விவேகானந்தர் இல்லத்தைக் கைப்பற்றும் எண்ணம் அரசிடம் இல்லை. செம்மொழி ஆய்வு மையத்திற்கான தற்காலிக கட்டடத்திற்காகவே இடம் பார்க்கப்பட்டது.
பெருங்குடியில் செம்மொழி ஆய்வு மையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படவுள்ளது. அதுவரை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் (விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் உள்ளது) செம்மொழி ஆய்வு மையம் செயல்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.