ஓடும் பஸ்சில் பெண்ணுக்குப் பிரசவம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே, ஓடும் பேருந்தில் பெண்ணுக்குப் பிரசவம் ஏற்பட்டது. இதில் அவர் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
சங்கராபுரம் அருகில் உள்ள அரசம்பட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஜான்சிராணி ( 22). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அரசம்பட்டிலிருந்து சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல பஸ் ஒன்றில் மாலையில் பயணம் செய்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சாலையோரம் உள்ள அரசு ஐடிஐ அருகில் பஸ் நிறுத்தப்பட்டது.
பஸ்சில் இருந்த ஆண்கள் அனைவரும் இறக்கப்பட்டனர். பெண்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர்.
சிறிது நேரத்தில் ஜான்சிராணிக்கு அழகிய பெண் குழுந்தை பிறந்தது. இதையடுத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அதே பேருந்தில் தாயும், சேயும் சங்கராபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.