ஐ.நா பாதுகாப்பு சபை-இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு
லண்டனில் 'லேபர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் சார்பில் தரப்பட்ட விருந்தில் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஜி-8 கூட்டமைப்பில் இந்தியாவும் இடம்பெறவேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்.
அதேசமயத்தில் (ஐக்கிய நாடுகள் சபை) பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடமில்லையென்றால் இன்றைய சூழ்நிலையில் அந்த கவுன்சிலுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.
உலகமயமாக்கலினால் ஏழை நாடுகள் பயனடையும்வகையில் இப்போதுள்ள சர்வதேச அமைப்புகளை சீரமைத்து புதிய சில அமைப்புகளை தோற்றுவிக்க வகை செய்யும் உலகளாவிய புதிய கூட்டணியில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளுக்கும், ஏழைநாடுகளுக்கும் இடையிலான இந்த புதிய கூட்டணியினால் பல கோடி ஏழை மக்களின் வறுமை ஒழிப்பு, எல்லா குழந்தைகளுக்கும் கல்வி, தொற்று நோய்களை ஒழித்தல் ஆகியவை உறுதி செய்யப்படும்.
எனது இந்த கருத்துக்கு இந்தியாவில் ஆதரவு இருக்கும் என்று தெரியும். லேபர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்புமூலம் ஒன்றைத் தெளிவு படுத்தவேண்டும். நம் இருநாட்டினருக்கும் இப்போதுள்ள நல்லுறவு முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
எனது பதவிக்காலத்தில் இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்துவேன். இந்த உறவின்மூலம் நம் இரு நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் பெரும் நன்மை ஏற்படும்.
உலகமயமாக்கலின் பலனை அனைத்து தரப்பு மக்களும் பெறச்செய்வதற்கான முயற்சிக்கு இதுவே நல்ல தருணம். சர்வதேச அமைப்புகளை சீரமைப்பதில் இந்தியர்கள் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்கிறேன் என்றார் பிரவுன்.