எம்பி தொகுதி நீக்கம்-புதுக்கோட்டையில் நாளை பந்த்
புதுக்கோட்டை: எம்பி தொகுதி நீக்கத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
தொகுதி மறு சீரமைப்பின்போது புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது. இந்த தொகுதியில் இடம் பெற்றிருந்த புதுக்கோட்டை, குளத்தூர், அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கரூர், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன.
இதை கண்டித்து அனைத்து அரசியில் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தொகுதி மீட்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சார்பில் 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
முதல் கட்டமாக பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு 5 லட்சம் தபால் கார்டுகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2வது கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இந் நிலையில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த ஆர்பாட்டத்துக்கு மாவட்ட வர்த்தக கழகம், ஹோட்டல் அதிபர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், வாடகை கார் உரிமையாளர் சங்கம் மற்றும் அனைத்து தன்னார்வ அமைப்புகள், வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த பந்த் காரணமாக புதுக்கோட்டைக்கு நாளை பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.