தர்மபுரியில் குழந்தை பலி-தடுப்பு ஊசி காரணம்?
தர்மபுரி: தர்மபுரியில் முத்தடுப்பு ஊசி போடப்பட்ட குழந்தை பலியாகியுள்ளது.
திருவள்ளூரில் தட்டம்மை தடுப்புஊசி முகாமில் ஊசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலியான நிலையில், ஒரிஸ்ஸாவில் இரு குழந்தைகள் பலியாகினர்.
இந் நிலையில் தர்மபுரியிலும் தடுப்பு ஊசி போடப்பட்ட ஆண் குழந்தையும் பரிதாபமாக இறந்துள்ளது.
தர்மபுரி அருகே உள்ள கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு-அனுசுயா தம்பதிக்கு 2 மாத ஆண் குழந்தை இருந்தது.
கடந்த 16ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி போடப்பட்டது. அதன்பிறகு குழந்தைக்கு காய்ச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்தக் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமானது. உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டதால் அந்த குழந்தை கம்பைநல்லூர் கொண்டு வரப்பட்டது.
இந் நிலையில் இன்று அதிகாலை குழந்தை இறந்துவிட்டது. தடுப்பு ஊசி போட்டதன் காரணமாகத்தான் தங்களது குழந்தை இறந்ததாக திருநாவுக்கரசு-அனுசுயா ஆகியோர் கூறுகின்றனர்.
ஆனால், தடுப்பு ஊசி போட்டதால் அந்த குழந்தை இறக்கவில்லை என தர்மபுரி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் அய்யனார் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போட்ட தடுப்பு ஊசி வேறு, இங்கு போடப்பட்ட தடுப்பு ஊசி வேறு. கம்பைநல்லூரில் குழந்தைக்கு போட்டது முத்தடுப்பு ஊசியாகும் என்றார் அய்யனார்.












Click it and Unblock the Notifications