கள்ளத் துப்பாக்கி வியாபாரி கைது- நக்ஸல்களுக்கு சப்ளை?
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கள்ளத் துப்பாக்கியை தயாரித்து விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 5 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் சரவணாபுரம் அருகே பச்சைமலை அடிவாரத்தில் ரகசியமாக கள்ளத் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், கள்ளத் துப்பாக்கி தொழிற்சாலையை கண்டுபிடித்தனர்.
அங்கு திருட்டுத்தனமாக துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தேவதாஸ் (47) என்பவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் விற்பனைக்கு தயாராக மறைத்து வைத்திருந்த 5 புதிய கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.
இதேபோல் கள்ளத் துப்பாக்கி தயாரித்ததாக கடந்த 1997ல் தேவதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள தேவதாஸுக்கு, தமிழகத்தில் இயங்கிவரும் தீவிரவாதிகள் மற்றும் நக்ஸலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.