கைதான அதிமுகவினருக்கு சிபாரிசு செய்த திமுக பிரமுகருக்கு டோஸ்
கரூர்: கரூர் மாவட்டத்தில் போலி மது சப்ளை செய்த அதிமுக நிர்வாகிகளை விடுவிக்கும்படி சிபாரிசு செய்த திமுக பிரமுகரை அக்கட்சியின் 'இளைய தலைவர்' வறுத்தெடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்பனை தொடர்பாக திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் தலைமையில் சமீபத்தில் ரெய்டு நடந்தது. தாந்தோனிமலையில் உள்ள ஒரு தோட்டத்தில் 576 போலி மதுபானங்கள், கார், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் தானேஷ், நகர மாணவர் அணி அமைப்பாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, தாந்தோணி நகர செயலாளர் ராயனூர் ரவி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் முத்துகுமார், ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளை பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது கரூர் மாவட்ட திமுகவைச் சேர்ந்த பவர்புல் பிரமுகர் ஒருவர் அதிமுகவினரை விடுதலை செய்யும்படி போலீசாரிடம் போனில் கூறியுள்ளாராம்.
இதையறிந்த திமுகவின் முக்கிய மாவட்ட நிர்வாகி டென்ஷனாகிவிட்டாராம். உடனே போலீசாருக்கு போன் செய்து அதிமுகவினரை விடுவிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார். ஒரே கட்சியைச் சேர்ந்த 2 பெரிய தலைகளிடம் சிக்கிக் கொண்டு செய்வதறியாது விழிக்கின்றனர் போலீசார்.
இந்த சிபாரிசு குறித்து கட்சியின் 'இளைய தலைவரிடம்' போட்டுக் கொடுத்துவிட்டார் டென்ஷனான நிர்வாகி. இதை கேட்டு கொதித்து போன அந்த தலைவர், சிபாரிசு செய்த பிரமுகருக்கு போனிலேயே டோஸ் விட்டு வறுத்தெடுத்துவிட்டாராம்.












Click it and Unblock the Notifications