கோடையின் மின்தடை இருக்காது-ஆற்காடு உறுதி
சென்னை: கோடையில் மின் தடை ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் சட்டசபை அதிமுக தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்க அறிக்கையில் 800 மெகா வாட் மின்சாரம் தட்டுப்பாடு இருப்பதாகவும், இது 1,300 மெகாவாட்டாக அதிகரிக்கலாம் என்றும் மின்சக்தி துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் மின்சாரத்துறை அமைச்சர் முன்பு பேசியபோது மின் பற்றாக்குறை இல்லை என்று கூறினார். இது முரண்பாடாக இருக்கிறது. உண்மை நிலையை அறிய விரும்புகிறேன் என்றார்.
அதற்கு பதிலளித்த வீராசாமி,
மின் பற்றாக்குறை இல்லை என்று நான் சொல்லவில்லை. மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் வாங்குவோம் என்று கூறினேன். மார்ச் மாதம் மழை பெய்ததால் விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்துவது 1,000 மெகா வாட் வரை குறைந்தது
வழக்கமாக ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகுதான் காற்று வீசும். ஆனால் நல்ல செய்தியாக 27ம் தேதி மாலை 3 மணிக்கு மேல் காற்றுவீச தொடங்கிவிட்டது. இதனால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாக துவங்கிவிட்டது.
இதனால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மின்தடை இல்லை. ஒருவேளை ஏதாவது குறைபாடு ஏற்பட்டாலும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் மின் தடை இருக்காது என்றார்.