ஒரு அடி-'லாஸ்' ரூ.3 கோடி!
மொஹாலியில் நடந்த போட்டியில் அடைந்த தோல்வியால் டென்ஷன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங், வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து நடந்த விசாரணையில் 11 போட்டிகளில் விளையாக ஹர்பஜன் சிங்குக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுதவிர அவருக்கு 100 சதவீத அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆடிய 3வது போட்டியிலிருந்து இந்த அபராதம் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அவருக்கு போட்டிக் கட்டணமே கொடுக்கப்பட மாட்டாது. இதனால் ரூ. 3 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
அவரை மும்பை அணிக்காக முகேஷ் அம்பானி தரப்பு ரூ. 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இப்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தால், ஹர்பஜனுக்கு வெறும் ரூ. 48 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
ஒரே ஒரு அடிக்காக இவ்வளவு பெரிய அபராதம் விதிக்கப்பட்ட ஒரே வீரர் ஹர்பஜன் சிங்தான்.
சச்சின் டெண்டுல்கர் இல்லாத நிலையில் கேப்டன் பொறுப்பு ஹர்பஜனைத் தேடி வந்தது. ஆனால் அதற்குத் தேவையான நிதானம், பொறுமை, பக்குவம் என எதுவுமே ஹர்பஜனிடம் இல்லாமல் போய் விட்டது. இதனால்தான் இவ்வளவு பெரிய இழப்பையும், அவமானத்தையும், தடையையும் ஹர்பஜன் சந்திக்க வேண்டியதாகி விட்டது என்று கிரிக்கெட் வட்டாரத்தில் வருத்தப்படுகிறார்கள்.