கன்னியாகுமரிக்கு 2 புதிய படகுகள்: குகன், பொதிகை!

சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் சாமிநாதன் அளித்த பதில்:
ஆட்சி அமைந்து 714 நாட்களில் சோதனைகளை கடந்து பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் செய்ததை இரண்டே ஆண்டுகளில் இந்த ஆட்சி செய்துள்ளது.
தேசிய சாலை ஆராய்ச்சி மையத்துக்கு 1,210 ஹெக்டேர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் வெறும் 310 ஹெக்டேர் நிலம் தான் கொடுக்கப்பட்டது.
மதுரை எல்லீஸ் நகர் மேம்பாலப் பணிகள் துரித வேகத்தில் செய்து முடிக்கப்படும். அதே போல மதுரை செல்லூர் மேம்பாலம் தொடர்பாக சிலர் கோர்ட்டுக்கு சென்றுள்ளதால், அந்தப் பணி நிலுவையில் உள்ளது.
கோவை ஒண்டிபுதூர் மேம்பாலப் பணிக்கு கடந்த ஆட்சியில் 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோப்பு அனுப்பப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பின் எந்த பதிலும் இல்லாமல், அந்த கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது.
வேகத்தடை சரியில்லாததால் பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. இதனால் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வேகத்தடை அமைக்க அரசு முடிவு செய்தது. இதுவரை ஆயிரத்து 622 சீரற்ற வேகத்தடைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
பாலங்களில் விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்க 6 மீட்டர் நீளத்துக்கு மேலான பாலங்களில் நடைமேடை மற்றும் கைப்பிடிச் சுவர்கள் அமைக்கப்படும்.
புதிதாக கட்டப்படும் அனைத்து பாலங்களிலும் நடைமேடை மற்றும் கைப்பிடிச் சுவர் கட்டப்படும்.
கன்னியாகுமரி படகுத் துறையில் 30 ஆண்டு பழமையான தாமிரபரணி மற்றும் பகீரதி ஆகிய இரண்டு படகுகளுக்கு பதிலாக 150 பயணிகள் செல்லும் வகையில் புதிய படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
ரூ. 2.10 கோடி மதிப்பில் இரண்டு படகுகளை கட்டிக் கொடுக்கும் பணி கேரள கப்பல் போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய படகுகளுக்கு குகன் மற்றும் பொதிகை என முதல்வர் பெயரிட்டுள்ளார்.
வரும் ஜூன் மாதத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு இவை கொண்டு வரப்படும் என்றார் சாமிநாதன்.












Click it and Unblock the Notifications