பாலு: மன்மோகன் அரசு மகா மோசம்-அத்வானி விளாசல்
டெல்லி: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் அமைதி காப்பது மிகவும் மோசமான செயல். இதுவரை இருந்த அரசுகளிலேயே மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் மகா ஊழல்வாத அரசு என்று பாஜக பிரதமர் வேட்பாளரான எல்.கே.அத்வானி கடுமையாக கூறியுள்ளார்.
அத்வானி தலைமையில் டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டி.ஆர்.பாலு விவகாரத்தை தேர்தல் பிரச்சினையாக கையில் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அத்வானி பேசினார். அப்போது டி.ஆர்.பாலு விவகாரத்தில் பிரதமரும், சோனியா காந்தியும் பெருத்த மெளனம் சாதிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுவரை இருந்த அரசுகளிலேயே மகா ஊழல்வாத அரசு மன்மோகன் சிங் அரசுதான் என்றும் அவர் கடுமையாக சாடினார்.
அத்வானி கூறுகையில், நாட்டில் இதுவரை இருந்த அரசுகளிலேயே மிகவும் மோசமான, ஊழல் நிறைந்த அரசு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.
டி.ஆர். பாலு தனது மகன்களுக்கு சாதகமாக தனது அமைச்சர் பதவியையும், துறையையும் பயன்படுத்தியுள்ளார். இதுதான் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மிகப் பெரிதாகும். மிகப் பெரிய அதிகார துஷ்பிரயோகம் இது. அப்படிப்பட்ட டி.ஆர்.பாலுவைக் காப்பாற்ற மன்மோகன் சிங் அரசு முயல்வது வெட்கக்கேடானது.
நேரு காலத்தில், பெரோஸ் காந்தி, தனது சக அமைச்சரான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு எதிராக மிகப் பெரிய போரே நடத்தினார். ஆனால் பாலு விவகாரம் அதற்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது.
சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு கண்ட நம்பகத்தன்மைக்கும், ஊழலற்ற போக்குக்கும் முற்றிலும் முரண்பாடாக இப்போதைய பிரதமர் மற்றும் சோனியா காந்தியின் செயல்கள் உள்ளன. எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி ஊழல்வாத கட்சியாக மாறிப் போய் விட்டது என்பதை இது காட்டுகிறது.
1950களில் முந்த்ரா ஊழல், நாட்டையே உலுக்கியது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் அது கலக்கியது. மறைந்த பெரோஸ் காந்தி, எல்ஐசி செய்த முறைகேடான ஊழலை வெளிக்கொணர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
நாடாளுமன்ற முதலீட்டுக் கமிட்டியின் அனுமதி பெறாமல், பெரும் நஷ்டத்தில் இருந்து வந்த தொழிலதிபர் ஹரிதாஸ் முந்த்ராவின் நிறுவனங்களில், எல்.ஐசி. நிறுவனம் ரூ. 1.24 கோடியை முதலீடு செய்த விவகாரத்ைத அவர் பெரிய அளவில் கிளப்பினார். அப்போது பெரோஸ் காந்தி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆவார். அமைச்சராகவும் இருந்தார்.
தனது சக அமைச்சரான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு எதிராக அவர் தொடுத்த போர், நேருவை உலுக்கியது. அப்படி ஊழலுக்கு எதிராக தனது சக கட்சியைச் சேர்ந்த அமைச்சர் என்று கூட பாராமல் போராடியவர் பெரோஸ் காந்தி. அவரது வழியில் வந்த சோனியா காந்தி, இப்போது டி.ஆர்.பாலு விவகாரத்தில் அமைதி காப்பது மிகவும் மோசமானது.
கடந்த சில நாட்களாக பாலு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போராடி வருகின்றன. மக்களின் கோபத்தையும், அதிருப்தியையும் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் உரைத்துக் கூறியபோதிலும், அரசிடமிருந்து ஒரு விளக்கமும் இல்ைல. குறிப்பாக பிரதமர் இதுகுறித்து எந்த பதிலையும் அளிக்காமல் உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கு எட்டு கடிதங்கள் போயிருக்கின்றன. அவற்றுக்கு உரிய விளக்கத்தை பிரதமர் தராமல் இருக்கிறார்.
தனது மகன்களின் நிறுவனத்திற்கு சலுகை வழங்குமாறு பெட்ரோலியத் துறையை கேட்டுக் கொண்டாக டி.ஆர்.பாலு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார். பிரமதர் அலுவலகமும், பாலுவின் பரிந்துரையை அங்கீகரித்து பெட்ரோலியத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது மிகவும் மோசமான செயல்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், நம்பகத்தன்மையையும் மதிக்கும் எந்தப் பிரதமரும், இதுகுறித்து உடனடியாக இரு அவைகளிலும் விளக்கம் தந்திருப்பார். ஆனால் டி.ஆர்.பாலு அனுப்பிய கடிதங்களை பெட்ரோலியத் துறைக்கு அனுப்பி வைத்தோம் என்று மட்டும் மொட்டையாக ஒரு விளக்கத்தை தந்து நிறுத்திக் கொண்டு விட்டது பிரதமர் அலுவலகம்.
இந்த விளக்கம், யாருக்கும் பலன் தராது. மாறாக, ஊழலை மூடி மறைக்கும் செயல் இது.
பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பெருத்த அமைதி காப்பது நாடாளுமன்றத்தையும், அவர் வகிக்கும் பதவியையும் அவமதிக்கும் செயலாகும் என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் குமார் மல்ஹோத்ரா கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஊழல்வாதிகளின் அரசாக மாறியுள்ளது. ஊழல் அமைச்சர்கள்தான் அமைச்சரவையில் நிரம்பியுள்ளனர்.
ஊழல் அமைச்சர்களை காக்கும் அரசு இது என்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். இதற்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியான பதிலை அளிப்பார்கள்.












Click it and Unblock the Notifications